Saturday 7 September 2013

பாதுகாப்பான மொபைல் பேங்கிங் சின்ன சின்ன யோசனைகள்

இன்றைய காலகட்டத்தில் மொபைல் பேங்கிங் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. விரல் நுனியில் அனைத்தையும் பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வங்கி கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போன்ற பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இவை அனைத்தும் மொபைல் பேங்கிங் வழியாக செய்ய முடியும்.

தற்போதைய வங்கி வாடிக்கையாளர்களில் 50 சதவீதம் பேர் 2015ம் ஆண்டுக்குள் மொபைல் வழியாக தங்கள் வங்கி நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள் என மொபைல் வழி நிதி சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரிசர்வ் வங்கி மொபைல் வழி மேற்கொள்ளக் கூடிய நிதி பரிமாற்றத்திற்கான ஒரு நாள் உச்ச வரம்பை 5 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பலர் மொபைல் வழி பேங்கிங் முறைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 20 கோடியை எட்டியுள்ளது. மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பாக மொபைல் பேங்கிங் செய்ய சில குறிப்புகள்: உங்கள் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைக்கவும். செல்போனில் எஸ்.எம்.எஸ். அலர்ட் வருமாறு பதிவு செய்யவும். செல்போனை வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன செல்போன்களை வைரஸ்கள் பாதிக்கக்கூடிய ஆபத்து அதிகம். உங்கள் செல்போனில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும். இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் டவுன்லோட் செய்ய வேண்டாம்.

(உதாரணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை). டெபிட் / கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை செல்போனில் பதிவு செய்ய வேண்டாம். உங்களது செல்போன் தொலைந்து போனால் மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள். மொபைல் பேங்கிங்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றுங்கள். வெளிப்படையான பாஸ்வேர்டுகளை (பிறப்பு பெயர், தேதி) பயன்படுத்த வேண்டாம்.

மொபைல் பேங்கிங்கின் போது பாதுகாப்பற்ற வை ஃபை இணைப்பை (கீவீதிவீ) பயன்படுத்த வேண்டாம். ப்ளூடூத்துடன் கூடிய சேவைகளை துண்டியுங்கள். எனினும், மேற்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும்.

வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு தினமும் வட்டி

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில், வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திற்கு, தினசரி அடிப்படையில் வட்டி வீதம் கணக்கிடும் முறை அமல்செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் சேமிப்புக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் பத்தாம் நாள் முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை இருக்கும் குறைந்தபட்ச தொகைக்கு வட்டி கணக்கிடப்படும் நடைமுறை முன்பு பின்பற்றப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், வெளியிட்ட ஆண்டு ரிசர்வ் வங்கி கொள்கை திட்டத்தில், ‘சேமிப்பு கணக்கிற்கான வட்டி வீதம், தினசரி அடிப்படையில் கணக்கிட வேண்டும்‘ என, பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், சேமிப்புக் கணக்கிற்கான வட்டியை குறைக்குமாறு, வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகின்றன. ஏனென்றால், தினசரி வட்டி வீதம் கணக்கிட்டால், தங்களின் கையிருப்பு குறையும் என, வங்கிகள் கருதுகின்றன. தற்போது, சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி, பெரியளவு தொகையுடன், அடிக்கடி பணப் பரிவர்த்தனைகள் செய்பவர்களுக்கு, தினசரி கணக்கில் உள்ள பணத்தின் அடிப்படையில் அதிக பயன் கிடைக்கும். எனினும், பணப்பரிவர்த்தனைகளை பொறுத்து, டெபாசிட்தாரர்கள் 1.5 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரையிலான வட்டி இனி கூடுதலாகப் பெறலாம் என, கணக்கிடப்பட்டுள்ளது’ என்றனர். இதுவரை சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் அதிகளவில் தூங்கிக் கொண்டிருந்த நிலைமாறி, ஏதோ சிறிதளவு பணம் வட்டியாக வரும் வாய்ப்பை இந்த நடைமுறை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment